காற்றில் கரைபவர்கள்

ஒரு மனிதன் காற்றில் கரைவது என்பது சினிமாவில் ஸ்டாப்ப்ளாக்கில் மறையும் காமெடி சீன்களில் மட்டுமே சாத்தியம். நிஜத்திலா? எனக்கு தலையை சுற்றியதுடன் அதை என்னிடம் சொன்ன "ரா" உயரதிகாரியின் மனநிலையை சந்தேகப்படவும் வைத்தது.

நேர்மையும் திறமையும் மிக்க அரசாங்க ஊழியர்களில் பொறுக்கி எடுத்த சிலர் வேலையிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளுக்குப் பின் அவ்வப்போது சில வேலைகள் கொடுக்கப்படும்.யார் வேலை கொடுப்பதென்பது தெரியாது. ஆனால் அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். அதில் நானொருவன்.

குடகுமலைப்ரதேசத்தில் பைதுளா எனும் 1000 குடும்பங்கள் வசிக்கும் ஊரில்தான் இந்த வினோதம். மிக நேர்மையான சுதந்திர உணர்வும் வீரமும் மிக்க அமைதியான மக்கள். வேட்டையில் ஆர்வம்மிக்கவர்கள். நமது சட்டங்களை மதிக்காதவர்கள்.ஊர் கட்டுப்பாடு மிக்க அவர்களால் எந்த ஒரு சிக்கலும் வராது.அவர்களுக்கு துப்பாக்கிக்கான உரிமம் மட்டுமல்ல தோட்டாக்களுக்கும் கணக்கு தேவையில்லை. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகை அது. அங்குதான் 15 நாட்களுக்கு ஒரு முறை நடை பெறும் கோயில் பூஜையில் பூஜைக்கு ஒருவர் என்ற முறையில் காணாமல் போக ஆரம்பித்தனர்.

இது "ரா" வரையில் போக காரணம். சுதந்திர உணர்வும் வீரமும் கணக்கு தெரியாத அளவு ஆயுதங்களும் கொண்ட மனிதர்களை யாரேனும் தவறாக வழி நடத்துகிறார்களா என்பதே.

இந்த ப்ரச்சனையை கண்டறிவதுதான் மகா நேர்மையாளன் என்று மற்றவர்களால் இகழப்படும் எனக்கான அசைன்மெண்ட்.

என்னளவில் கடவுளோ அவரால் நிகழ்த்தப்படும் அற்புதங்களோ இவையெல்லாம் ஏமாற்று வேலை அல்லது அறியாமைதான்.
ஆனால் எப்பொழுதும் ஒரு சம்பவத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராயவேண்டும். முதலில் ப்ரொபசர் சாம்பசிவத்திடம் இதைப் பற்றி கூறினேன்.

"ஹாஹா வினோதம்தான். இது வரை தானாக தீப்பிடித்து எரிந்த கேஸ் சில மருத்துவ வரலாற்றில் இருக்கு. காற்றில் மறைந்து போவது என்பது சான்ஸ்லெஸ்" என்றார்.

அடுத்து அவர்கள் மறைந்ததாக நீ சொல்லும் தேதிகள் பவுர்னமிக்கும் அம்மாவாசைக்கும் மிகச்சரியாக இடையில் வரும் அஷ்டமி அன்று. அன்று நிலவின் ஈர்ப்பு விசை நமது பூமி மீது மிகக்குறைவாக இருக்கும். பவுர்னமி அல்லது அம்மாவாசையில் மிக அதிகமாக இருக்கும். அந்த ஈர்ப்புவிசை பொதுவாக ஊர்வனவற்றின் மீது கொஞ்சம் அதிகமாக ஆளுமை செய்யும் இந்த சமயங்களில் அவை molting process எனப்படும் தோலுறிக்கும் நிகழ்வு நடக்கும். கடலலைகளின் சீற்றத்தில் வித்தியாசம் தெரியும் . ஆனால் மனிதனின் மீது நிலவின் ஈர்ப்பு விசையின் தாக்கம் சொற்பமே என்றாலும் மாறுதல்கள் ஏற்படும். அம்மாவாசையில் பைத்தியங்கள் கொஞ்சம் அதிகமாக ரகளை செய்வது போல். இதைதவிர இதில் எதுவும் இல்லை என்றார்

ஓகே ப்ரொபசர், உங்கள் ப்ராக்டிக்கல் அனுபவத்தை அப்படியே தூக்கி வைத்துவிடுங்கள். இந்த சம்பவத்தில் உள்ள சாத்தியமில்லாத சாத்தியங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். என்றேன். என்னை ரசித்து கொஞ்சநேரம் புன்னைகையுடன் பார்த்தவர் "ஓகே மை பாய், நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த இடத்தை விட்டு அகலுவது எனில்,
ஒளி வேகத்தைவிட வேகமாக சேல்லும் ஒன்றின் மீது அவர்கள் பயனித்திருக்கலாம். கால இயந்திரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? இது வேண்டுமென்றால் உன் சாத்தியமில்லாத சாத்தியங்களுக்குள் வரலாம். கடவுள் ஒருவனை அப்படியே ஏற்றுக்கொண்டார் எனும் உளரலைவிட கால இயந்திரம் சற்று சாத்தியமே". ம்ஹூம் நான் இப்படி சொல்வதை யாராவது கேட்டால் எனக்கு உடனடி கீழ்பாக்கத்தில் அட்மிசன்தான் என்று சிரித்தார்.

இன்னுமொரு கோணத்தில் இதை விசாரிக்க தோன்றியது. பைதுளா சென்று சேர்ந்தேன். பைதுளாவில் இருந்து 60 கிமீயில் சித்தர்கள் பூமி எனப்படும் பைதுளா மக்கள் வணங்கும் ஒரு இடம் பற்றியும் அங்குள்ள குகையில் இருக்கும் ஒரு சாமியார் பற்றியும் அறிந்து அவரை காணசென்றேன்.

குகை வாசலில் இருந்த அவர் என்னைக்கண்டதும் என் கண்களையே உற்றுப்பார்த்தார். பெரும்ப்ரயத்தனதிற்கிடையில் என் எடை போடும் சந்தேக கண்களை அமைதிப்படுத்தினேன்.சாமியார்கள் முதலில் தங்களிடம் வருபவர்களை கண்களால் யூகித்து அதை வைத்துத்தான் அள்ளி விடுவார்கள். எத்தனை பார்த்திருக்கிறேன்.

சாமியார் ஒரு குறுஞ்சிரிப்பு சிரித்தார்.குறுகுறுப்புடன் பார்த்தார்."உன் எடையில் எத்தனை பங்கு நீரென்று தெரியுமா?மேலும் கீழுமாக தலையசைத்தேன். இந்த குகைக்குள் இருக்கும் காற்றில் எந்த அளவு நீரென்று தெரியுமா? அதற்கும் மேலும் கீழுமாக...இரண்டும் ஒன்றென்றால் காற்றில் மறைவது ஒரு விஷயமா?"

நான் கேட்காமலே எப்படி?ம்ம்ம் யூகித்திருக்க வேண்டும். பக்கத்து ஊர் பிரச்சனையல்லவா? சாமர்த்தியத்தை இங்கே காட்ட கூடாது. நடிடா மகனே நடி. அருகில் சென்று பக்தியுடன் தலை குனிந்து "சாமி அப்போ மறைந்து போகிறவர்கள் எங்கேதான் போறாங்க. எதுக்கு போறாங்க? எப்படி போறாங்க?" என்றேன்.

குனிந்த என் பின்தலையில் கை வைத்து நிமிர்த்தியவர் என் கண்களை உற்றுபார்த்தார்.கிட்டத்தட்ட இரண்டு நிமிடம்.பின்தலையில் இருந்த கை உச்சந்தலைக்கு வந்தது. கனிவாகச் சிரித்தார். அதே வேகத்திள் குகைக்குள் போய்விட்டார்.குகைக்குள் மற்ற மனிதர்கள் போகவே கூடாதென்று முன்னமே எச்சரிக்கப்பட்டிருந்தேன்.
இவனுங்களைப்புடிச்சு முதலில் உள்ளே போடவேண்டுமென்று எரிச்சலுடன் முனகியவாறே பைதுளா திரும்பினேன்.

ஆக நேரடி ஆக்சன்தான் இனி. இதில் அசைன்மெண்ட்டில் சொல்லப்பட்டது ஒரு சின்ன ப்ரச்சனைக்கூட என்னால் வரக்கூடாது என்பது.வெளி ஆட்கள் பைதுளாவில் தங்கக்கூடாது என்பது அவர்களின் விதி.

சிறு வயதில் காணாமல் போன அந்த ஊர் பையனின் பெயரை சொல்லி அது நான்தான் என் நம்பவைத்தேன். சங்கிலி என்பவனை சிநேகமாக்கினேன் .அதன் பின் சமூகத்திற்கான சடங்குகள் எனக்கு செய்யப்பட்டன. பின்கழுத்தில் குத்தப்பட்ட பச்சை உட்பட. ம்ஹூம் இந்த கேஸ் முடிந்ததும் ப்ளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் செய்ய வேண்டி வரும் போல.

அதன்பின் அடுத்த ஒரு மாததில் நான் கண்டுபிடித்தவை.

கோவில் ஊரில் இருந்து ஒரு கிலோமீட்டரில் ஒரு பாறைக்கு அடியில் விசாலமாக குகை குகையாக இருந்தது.அதில் எந்தவித ரகசிய வழிகளும் இல்லை.
அஷ்டமி அன்று நடைபெறும் பூஜையில் பூஜை முடிந்தவுடன் தீப்பந்தங்களை அணைத்து இருட்டில் மிகப்பெரிய முரசு மூன்று தடவை அடிக்கப் படுகிறது. திரும்ப பந்தங்களை பற்ற வைத்துப்பார்கையில் ஒருவன் மாயமாகியிருக்கிறான்.

அந்த பூஜைக்கு முன்பு ஒருவாரத்துக்கு சில பூஜைகள் நடக்கிறது. அதன் பின்பான ப்ரதான பூஜையில் ஐந்து நபர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ப்ரதான பூஜையில் கலந்து கொள்ளுபவர்களில் ஒருவர்தான் மாயமாவது நடக்கிறது. அதிலும் அதன்முன் ஒரு வாரகால பூஜைகளிலும் கலந்து கொண்ட ஆள்தான் மாயமாகிறான்.

அதிலும் மறைந்து போனவர்கள் அனைவருமே மிக நல்ல மனிதர்கள். அதனாலேயே ஊரில் கடவுள் செயலாக அது மதிக்கப்பட்டது.
எங்கே எப்படி மறைகிறார்கள் என்பதில் ஒரு சின்ன உறுத்தலைத்தவிற மற்றவைகளில் ஒரு தெளிவு வந்தாகிவிட்டது.
கோவில் உள்ளே சுத்தபடுத்தும் பொறுப்பினுள் புகுந்ததாலே எல்லா இடங்களிலும் பல சென்சர்கள் பதிக்கப்படுவது எளிதாயிற்று.

அதன் பின் அந்த ஒரு வார பூஜைகளிலும் சங்கிலியுடனே இருந்து அதேசமயம் சங்கிலியை தவிற மற்றவர்கள் ஏதாவது ஒரு பூஜையையாவது தவற விடும்படி செய்தேன் .

இப்போது அடுத்து மாயமாகும் ஆள் சங்கிலி என்பது தெளிவாகிவிட்டது.பூஜையன்று சங்கிலி அறியாதவாறு சங்கிலியின் ஆடைகள்,ஆபரணங்கள் வழியாக சில GPS உபகரணங்கள் சேர்க்கப்பட்டது.இனி சங்கிலி உலகத்தில் எங்கு போனாலும் கண்டுபிடித்துவிட முடியும்.

எனக்கு லேசாக உறுத்திக்கொண்டிருந்த விஷயம் ஒரு மர வளையம். ப்ரதான பூஜையில் மாயமாவதற்கு முன்பு ஒரு வளையம் போண்ற ஒரு மரத்திணுள் நின்றுதான் ஐவரும் வணங்குவர். அந்த மரவளையத்தை ஒரு கால இயந்திரமென்ற அளவுக்கு இல்லையென்றாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மர்மத்தின் மைய புள்ளியாக சந்தேகித்தேன். இந்த தடவை அதையும் விடக்கூடாது.

அனைத்து சடங்குகளிலும் சங்கிலியின் உடனேயே இருந்தேன். கடைசி ப்ரதான பூஜை சங்கிலியை ஒட்டி உரசியவாரே நின்றுகொண்டேன்.

பந்தம் அணைக்கப்பட்டது.

டம்ம்ம்ம்ம்ம்ம்...
மர வளையத்தில் ஒரு கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்.

டம்ம்ம்ம்ம்ம்ம்...
சங்கிலியோடு இன்னும் நன்றாக ஒட்டிக்கொண்டேன்.

டம்ம்ம்ம்ம்ம்ம்





சிரில் அலெக்ஸின் போட்டிக்காக